பாளை சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்

Update: 2021-04-23 03:45 GMT
பாளையங்கோட்டை மத்திய சிறை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது இதில் ஆபத்தான நிலையில் ஒருவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த முத்து மனோ (27), சந்திரசேகர்(22) கண்ணன்(23) மாதவன் (19)ஆகிய 4 பேரிடம் அரிவாள்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து 4 பேரும் ஸ்ரீவைகுண்டம் சிறைச்சாலையிலிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்க கொண்டு வரப்பட்டனர். பாளை மத்திய சிறைச்சாலைக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டு கைதிகளுக்கான செல்லுக்கு அனுப்பும் போது சிறையிலிருந்து ஒரு பிரிவைச் சார்ந்த கைதிகள் அந்த 4 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் முத்து மனோ மீது கல்லால் தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்திரசேகர்(22), கண்ணன்(23), மாதவன் (19) ஆகியோர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .முத்து மனோ மீது களக்காடு, முறப்பநாடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் பாளை மத்திய சிறையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News