ஊரக உள்ளாட்சி தேர்தல்: மனுத்தாக்கலுக்கு மாட்டு வண்டியில் வந்த அமமுக வேட்பாளர்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனுதாக்கல் செய்ய அமமுக வேட்பாளர் மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தார்.

Update: 2021-09-22 11:02 GMT

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மாட்டு வண்டியில் மனுதாக்கல் செய்ய வந்த அமமுக வேட்பாளர் கார்த்திக் .

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 9 ஒன்றியங்களில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 

களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு அக். 9ம் தேதியும் 2ம் கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு அக்.12ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த 15ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் கடைசி நாளில் அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் உற்சாகத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

முன்னதாக வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்கள் புடைசூழ கூட்டம், கூட்டமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு குவிய தொடங்கினர். அதேபோல் தேமுதிக, அமமுக, பாமக உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் கடைசி நாளில் மிகுந்த ஆர்வத்துடன் மனுதாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அமமுக வேட்பாளர் கார்த்திக் என்பவர் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தார்.

அமமுக சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் விவசாயத்தின் பாரம்பரியம் மாட்டுவண்டி, எனவே விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் மாட்டுவண்டியில் வந்ததாகவும் கார்த்திக் தெரிவித்தார்.

தொடர்ந்து நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப்பெற 25ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News