100 நாட்களில் 3,787 மனுக்களுக்கு உடனடி தீர்வு: நெல்லை ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாட்களில் 3,787 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Update: 2021-08-18 05:30 GMT

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாட்களில் 3,787 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 12,573 மனுக்கள் பெறப்பட்டு 3,787 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலம் 1,058 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. 738 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 33 பேருக்கு நில உரிமை பட்டா பெயர் மாற்றியும், 49 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இத்திட்டத்தில் அடிப்படை வசதிகள் கோரி வழங்கப்பட்ட மனுக்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ரூ 17 கோடி மதிப்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட தொழில் மையம் மூலம் 18 ஏழை பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் தொழில் கடனாக ரூ. 58.80 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் மூலம் 180 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தகுதியான 90 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று நோய் தொற்று கண்டறியும் பணிக்காக 2,891 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 854 படுக்கைகள் மற்றும் 516 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட 4,21,032 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 225 பேருக்கு ரூ.3.30 கோடி காப்பீடு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகள் குறித்த புகார்களை தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு 93424 71314 என்ற எண்ணில் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் பெறப்பட்ட 243 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News