நெல்லையில் அனுமதியின்றி இயங்கிய உணவு பூங்காவுக்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்'

நெல்லை மாநகரில் அனுமதியின்றி இயங்கி வந்த உணவு பூங்காவை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Update: 2022-05-13 10:22 GMT

நெல்லை மாநகரில் அனுமதியின்றி இயங்கி வந்த உணவுப் பூங்கா.

நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் தனியார் பெட்ரோங் பங்க் எதிரில் அன்சார் என்பவருக்கு சொந்தமாக நெல்லை உணவு பூங்கா இயங்கி வந்தது. இங்கு ஹோட்டல்கள் உள்பட பல்வேறு வகையான உணவு சார்ந்த 47 கடைகள் செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில் இந்த உணவு பூங்கா அரசிடம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இன்று நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் ஐயப்பன் மற்றும் நகர வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ரங்கநாதன் ஆகிய அதிகாரிகள் தலைமையில் அங்கு சென்ற குழுவினர் அனுமதி இன்றி இயங்கி வந்த நெல்லை உணவு பூங்காவுக்கு சீல் வைத்தனர்.

இதையொட்டி மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்டவர் உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டல்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் நெல்லை மாநகரின் முக்கிய பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் உணவு பூங்கா செயல்ப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News