விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 பிள்ளையார் ஓவியங்கள் வரைந்து மாணவி சாதனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 பிள்ளையார் ரூபங்களை குங்குமம், மஞ்சள் கொண்டு ஓவியங்களாக வரைந்த மாணவி ஸ்ரீநிதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Update: 2022-08-21 07:37 GMT

மாணவி ஸ்ரீமதி. 

நெல்லை மாவட்டம், என் ஜி ஓ பி காலனியை சேர்ந்த கிருஷ்ணகுமார்-வித்யா லட்சுமியின் மகள் ஸ்ரீநிதி. இவர் புஷ்பலதா பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சிவராம் கலைக்கூடத்தில் 7 வருடங்களாக ஓவியம் பயின்று வருகிறார்.

ஸ்ரீநிதி விழிப்புணர்வு ஓவியங்களிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியவர். அக்கரலிக் கலர் ஓவியம், கலர் வாட்டர் கலர் ஓவியம், பென்சில் ஓவியம், ஆயில் பெயிண்டிங் ஆகியவற்றில் திறமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சக மாணவிகளோடு சேர்ந்து வரைந்த பாரதியின் ஓவியம் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் மாணவி ஸ்ரீநிதி ஓவியத்தில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று கடந்த ஒரு வருடம் முன்பு தொடங்கி வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 பிள்ளையார் ஓவியங்களை வரைய திட்டமிட்டு செயல்படுத்தியும் உள்ளார். இந்த பிள்ளையார் ஓவியங்களை நாம் தினமும் பூஜை அறையில் பயன்படுத்தும் குங்குமம் மற்றும் மஞ்சள் கொண்டு வரைந்து உள்ளது பார்ப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையார் ஓவியங்களில் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் பிள்ளையார் அவருடைய எலி வாகனத்தில் செல்வது, ஐந்து தலை பத்து கைகளுடன், அம்மன் வடிவில், டிரம்ஸ் வாசிப்பது போல் என பல்வேறு கோணத்தில் பிள்ளையார் ஓவியங்களை வரைந்து உள்ளார்.

ஸ்ரீநிதி வரைந்த 108 ஓவியங்களையும் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி இருந்தார்.

மாணவி ஸ்ரீமதி கூறுகையில், நான் கின்னஸ் சாதனைக்காக கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று முதல் விநாயகர் படத்தை வரைந்தேன். தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்திக்குள் 108 விநாயகரும் 108 ரூபங்களில் ஓவியமாக வரைந்து முடித்துள்ளேன். ஒவ்வொரு பிள்ளையார் சாமி படங்களை வரையும் போது ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி எனக்கு கிடைத்தது.

என்னுடைய இந்த ஓவியங்கள் கின்னஸ் புக் ஆப் ரெக்கார்டுல வர வேண்டும் என்பது என்னுடைய கனவு என தெரிவித்தார்.

Tags:    

Similar News