நெல்லையில் நடுரோட்டில் நர்ஸ் உயிரோடு எரித்துக்கொலை

நெல்லையில் நடுரோட்டில் நர்ஸ் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-05-05 05:28 GMT

நடுரோட்டில் எரித்து கொலை செய்யப்பட்ட நர்ஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அடுத்த சங்கரலிங்கபுரத்து சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரின் மனைவி அய்யம்மாள்(வயது 45). இத்தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். பாலசுப்ரமணியம் குடும்பத்துடன் இஸ்லாமிய மதத்திற்கு மாறி இருக்கிறார். இதனால் அவர் தனது பெயரை அக்பர் இப்ராஹிம் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

அய்யம்மாள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்காக குடும்பத்துடன் பாளையங்கோட்டை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் அய்யம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு 7 மணியளவில்  மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு காத்திருந்த அவரின் கணவர் பாலசுப்ரமணியத்தின் பைக்கில் ஏறிச்சென்றுள்ளார்.  மருத்துவமனை அருகே அண்ணா நகர் தெரு வழியாக சென்றபோது, கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம் பைக்கை நிறுத்திவிட்டு திடீரென மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். உடனே, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்ததால் பாட்டில் உடைந்து மண்ணெண்ணெய் உடலில் பரவியது . உடனே அவரை உயிரோடு தீ வைத்துள்ளார். சிறிது நேரத்தில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே செவிலியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மனைவி இறந்த பின் பாலசுப்ரமணியன் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்த போலீசார் அய்யம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய பாலசுப்ரமணியனை பிடிக்க போலீசார் தேடி வந்த நிலையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் மீண்டும் இணைந்து நெல்லை அண்ணாநகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை உயிருடன் எதிர்த்து கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News