டூவீலரில் 6 கிலோ கஞ்சா கடத்தல்: வாலிபருக்கு "காப்பு"

பாளையங்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-28 02:52 GMT

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை - தூத்துக்குடி சாலையில் மாவட்ட நீதிமன்றம் அருகே பாளையகோட்டை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் படியாக வந்த வாலிபரை மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது அந்த நபர், பையில் மறைத்து வைத்து 6 கிலோ கஞ்சாவை சட்டவிரோதமாக எடுத்து சென்றது தெரிய வந்தது. விசாரணையில் அந்த நபர் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் சேர்ந்த சங்கர் (19) என்பதும், அவர் நடுவக்குறிச்சி அடுத்த வாகைக்குளத்தை சேர்ந்த முத்துக்குட்டி என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பாளையங்கோட்டைப் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா கடத்திய வாலிபர் சங்கரை பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் எடுத்துச் சென்ற 6 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன், இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையம் வந்து விசாரணை மேற்கொண்டார். கஞ்சா கடத்தலை கையும் களவுமாக பிடித்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதுபோன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தினால் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று நெல்லை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

Tags:    

Similar News