சென்னையை கலக்கிய பிரபல ரவுடி நீராவி முருகன் நெல்லையில் என்கவுண்டர்
நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் வழியில் ரவுடி நீராவி முருகன் சுற்றி வளைத்த திண்டுக்கல் தனிப்படை சுட்டு வீழ்த்தியது.;
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு என்ற இடத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி என்கவுண்டர் முறையில் திண்டுக்கல் காவல்துறை தனி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மீது கொலை கொள்ளை வழிப்பறி வழக்கு என 60 வழக்குகள் உள்ளது இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு மருத்துவர் வீட்டில் 240 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் முருகனை திண்டுக்கல் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை தனிப்படையினர் நாங்குநேரியில் இருந்து களக்காடு சாலையில் கடம்போடுவாழ்வு அருகே உள்ள இடத்தில் இனோவா காரில் பதுங்கி இருந்த அவரை சுற்றி வளைத்த போது உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா கைது செய்ய முயன்றபோது நீராவி முருகன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். காவல்துறையினர் என்கவுண்டர் முறையில் அவரை சுட்டுக் கொன்றனர்.
நீராவி முருகன் அரிவாளால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, போலீசார் சத்யராஜ், மணி உள்ளிட்ட 4 பேர் லேசான காயம் அடைந்தனர் அவர்களை உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர் கூறும்போது, நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டர் தொடர்பாக களக்காடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு மேஜிஸ்ட்ரேட் விசாரணையும் நடைபெறும்.எஸ் ஐ இசக்கி ராஜா உட்பட நான்கு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.என்கவுண்டர் செய்யப்பட்ட நீரவி முருகன் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.பெண்களை தொடர்ந்து துன்புறுத்தி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவது நீராவி முருகன் வழக்கம் என்றும் தெரிவித்தார்.