நெல்லை அருகே குப்பைமேடாகக்கிடந்த குளத்தை மீட்டெடுத்த புதுமைப்பெண்...!

2016-ஆம் ஆண்டு தனிஒருத்தியாக களமிறங்கிய சங்கரி மூன்று கட்டங்களாக சிவந்திபுரம் அலங்காரி அம்மன் குளத்தை மீட்டெடுத்துள்ளார்

Update: 2021-07-30 12:15 GMT

நெல்லை மாவட்டம், சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரி. இயற்கை மருத்துவரான இவர் அதே பகுதியில் கிளினிக் அமைத்து இயற்கை மருத்துவம் பார்த்து வருகிறார். இயற்கை மருத்துவர் என்பதாலோ என்னவோ இயற்கையை பாதுகாக்க தனி ஒருத்தியாக  களமிறங்கி இச்சாதனையை செய்துள்ளார்.

நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் சிவந்திபுரம் கிராமம் உள்ளது. இந்த ஊரின் பேருந்து நிறுத்தம் அருகில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அலங்காரி அம்மன் குளம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கோயில் குளமாக  இருந்தது. தற்போது அம்பாசமுத்திரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அலங்காரி அம்மன் குளத்திற்கு அணைகளில் இருந்தோ அல்லது பிற நீர்நிலைகளில் இருந்தோ நீர் எதுவும் வருவதில்லை. மழை பெய்தால்தான்  குளத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.  ஊர் பொதுமக்களும், நகராட்சி நிர்வாகமும் முறையாக குளத்தை பராமரிக்கவில்லை.  இதனால் குளத்தின் நான்கு கரைகளிலும் செடி, கொடிகள் வளர்ந்தும்,குப்பைகளும் குளத்தின் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உருவானது.  இந்த குளத்தைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தாலும், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கக்கூடிய இந்த  குளத்தின் நிலைமை  பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.  அதுமட்டுமல்லாமல், குப்பைக்கிடங்காக்கவும்  இந்த குளத்தை மாற்றிவிட்டனர். குளத்தின் நான்கு புறமும் எங்கு பார்த்தாலும் குப்பை மேடாக காட்சி அளித்தது.  குளத்தின் நடுவே அமலிச் செடிகளும் படர்ந்து நிறைந்து காணப்பட்டன.

இந்த சூழலில் தான், நாள்தோறும் வேலைக்கு செல்வதற்காக இந்த குளத்தை கடந்து சென்ற மருத்துவர் சங்கரி குளத்தின் அவல நிலையை மாற்ற முடிவுசெய்தார். 2016ஆம் ஆண்டு தனி ஒருவராகக் களமிறங்கிய ர் சங்கரி குளத்தை  மீட்டஎடுத்து பராமரிக்க மூன்று கட்ட திட்டங்களை வடிவமைத்தார்.

முதல்கட்டமாக,  குளத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  குடியிருப்பின் அனைத்து பகுதிகளிலும் குப்பைத் தொட்டிகளை வாங்கி வைத்தார். இதன் பலனாக குளத்தில் குப்பை கொட்டுவது குறைந்தாலும், குளம் பார்ப்பதற்கு குப்பை கிடங்காகவே  காட்சி அளித்தது.

 இரண்டாவது கட்டமாக குளத்தை ஆக்கிரமித்திருந்த அனைத்துக் குப்பைகளையும் தனது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தப்படுத்தி, குளத்தை ஆழப் படுத்தினார். மூன்றாவது கட்டமாக மாணவர்களையும் தன்னுடைய சமூகப் பணியில் ஈடுபடுத்தினார். குளத்தின் நான்கு கரைகளையும் பலப்படுத்தினார்.இதை கண்ட சிவந்திபுரம் ஊராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கரிக்கு உறுதுணையாக  வந்ததனர். குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கத் தேவையான முயற்சிகளை எடுத்தார்.  சங்கரி தனி ஒருவராக நின்று கடந்த ஐந்து ஆண்டுகளில்  சாதித்து காட்டியுள்ளார்.

இவர் எடுத்த எடுத்த பெருமுயற்சியால் குப்பை மேடாகக் காட்சியளித்த அலங்காரி அம்மன் குளம் தற்போது நான்கு புறமும் தண்ணீர் ததும்பி கடல் போல் காட்சியளிக்கிறது. பொதுவாக இதுபோன்று சமூக சேவைகளில் தன்னார்வலர்கள் பலர் தாமாகவே முன்வந்து உதவி செய்வார்கள். ஆனால் மருத்துவர் சங்கரி விஷயத்தில் அது நடக்கவில்லை . இருப்பினும் மனம் தளராமல்  யார் உதவியையும் எதிர்பார்க்காமல் தான் மருத்துவம் பார்த்ததன்  மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு குளத்தை பராமரிக்க செலவு செய்துள்ளார். குளத்திற்காக இதுவரை அவர் செய்துள்ள செலவு குறித்து கணக்கு எதுவும் தான் வைத்து கொள்ளவில்லை என்று சாதாரணமாக  கூறினார் சங்கரி.    சொல்கிறார்.

அடுத்தகட்ட முயற்சியாக குளத்தின் நான்கு கரைகளிலும் வேலி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் அலங்காரி அம்மனே சங்கரி உருவில் வந்து இந்தப் பணியை செய்து முடித்துள்ளதாக  அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். பல தடைகளை தாண்டி பொது நோக்கில்  குளத்தை சீரமைத்து கொடுத்தாலும், ஊர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் தான் இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்பதுதான் நிதர்சனம் .

Tags:    

Similar News