மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் தண்ணீர் திறப்பு

மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

Update: 2022-05-01 07:30 GMT

மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீரைத் திறந்து வைத்தார்

மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீரைத் திறந்து வைத்தார்,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து கார்சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தமிழக அரசு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று அணையில் இருந்து பெருங்கால் பாபசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் இருப்பை கருத்திற்கொண்டு மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் 28.08.2022 வரை (120 நாட்களுக்கு) தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன்மூலம் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், தெற்கு பாப்பான்குளம் தெற்கு கல்லிடைகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த 2756.62 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: முதல்வர் உத்தரவுப்படி மணிமுத்தாறு அணையில் இருந்து கார்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 40 கன அடிக்கு குறையாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது . விவசாயிகளுக்காக முதல்வர் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். நமது மாவட்டத்தில் பிசான சாகுபடியின் போது தேவையான இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது .

மேலும் மழை காலங்களில் வீணாக செல்லும் நீரை பயன்படுத்தும் வகையில் மணிமுத்தாறு, பச்சையாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளை டனல் மூலம் இணைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு ஆய்வில் உள்ளது. மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நுழைவு கட்டணம் குறித்து மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும். மணிமுத்தாறு அணையின் கீழ் காமராஜர் முதல்வராக இருந்த போது பூங்கா அமைக்கப்பட்டு தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது. இது விரைவில் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது என்றார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபிமனோகரன், இசக்கிசுப்பையா, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News