ஓட்டல் ஊழியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: வியாபாரிகள் சாலை மறியல் பாேராட்டம்

நெல்லை அருகே முக்கூடலில் ஓட்டலில் பார்சல் வழங்க தாமதமானதால் ஆத்திரமடைந்த நபர் ஊழியரை சரமாரி வெட்டி விட்டு தப்பியோட்டம்.

Update: 2021-08-21 15:34 GMT

முக்கூடலில் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை சேர்ந்தவர் சகாய பிரவீன். இவர் முக்கூடலில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சிலர் உணவு பார்சல் கேட்டு வந்துள்ளனர். ஒட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பார்சல் உணவு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் ஒட்டலுக்குள் புகுந்து கடையை சூறையாடியதுடன், ஒட்டல் ஊழியர் சகாயபிரவினை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஒட்டல் ஊழியர் வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வியாபாரிகள் முக்கூடல் பகுதியில் கடைகளை அடைத்து குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளுடன், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் வியபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News