நெல்லை அருகே 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த விசாரணை பெண் கைதி கைது

12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Update: 2021-08-31 11:13 GMT

12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கைதி முத்துலெட்சுமியை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிளாக்குளம் கிராமத்தில் கோபாலகிருஷ்ண அய்யர் தெருவைச் சேர்ந்த (லேட்) ஆதிமூலம் என்பவரது மனைவி முத்துலெட்சுமி (65) என்பவர் அம்பை காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவர் மீது குற்ற வழக்கானது PRC 01/2010 ன் படி கோப்பிற்கு எடுக்கப்பட்ட சமயம் பெயிலில் இருந்து வந்தவர் தலைமறைவாகி விட்டார்.

2010 ஆம் ஆண்டிலிருந்து குற்றவாளிக்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இன்று வரை தவக்கத்தில் இருந்து வந்தது. இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. அதனடிப்படையில் முத்துலட்சுமியை கைது செய்து பிடியாணையை நிறைவேற்றிட அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்ஸிஸ்க்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் சந்திரமோகன் சோனியா மற்றும் காவலர் முகமது ரபிஃக், மரியதர்ஷினி, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய தனிப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளியை இன்று கைது செய்து நீண்ட நாட்களாக தவக்கத்தில் இருந்து வந்த பிடியாணையை நிறைவேற்றி, தொடர்ந்து குற்றவாளி முத்துலட்சுமியை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News