செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

Update: 2021-01-24 05:15 GMT

அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் காதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி இளைஞர் ஒருவர் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள வைராவிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 ம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். அதன்பின் அந்தப் பெண் அவரது வீட்டிற்கு வர சம்மதிக்கவில்லையாம். மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தாராம்.

இதையடுத்து இன்று காலை கல்லிடைகுறிச்சி பழைய காவல் நிலையம் பின்புறம் உள்ள செல்போன் டவரில் ஏறி தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரிக்கை விடுத்தார். அந்தப் பெண் வரும் வரை தான் செல்போன் டவரில் இருந்து இறங்கப்போவதில்லை என்றும் கூறி வருகிறார். இது குறித்த தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் மற்றும் அம்பாசமுத்திரம் தீயணைப்புத்துறையினர் ஆனந்தராஜிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News