தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Update: 2024-04-29 13:16 GMT

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்).

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் 27வது தலைமை மடாதிபதி இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரின் உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளருக்குப் புகார் மனு ஒன்றைக் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அளித்தார். 

அதில், தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச விடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாகவும் வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும், அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க தலைவர் அகோரம் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அகோரம் ஏற்கனவே ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 45 நாட்கள் மேலாகச் சிறையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சில குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக அகோரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் காவல்துறை வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News