நண்பர்களை காப்பாற்ற உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதிஉதவி கிடைக்குமா ?

சின்னமனுார் அருகே கல்குவாரியில் இறந்த மாணவர்கள் தனது நண்பர்களை காப்பாற்றிபோது உயிரிழந்தது தெரிய வந்துள்ளது

Update: 2021-10-30 08:45 GMT

சின்னமனுார் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ்(14,) கவுதம்(14 ). இவர்கள் வேப்பம்பட்டி கல்குவாரியில் குளிக்க சென்ற போது சிக்கி உயிரிழந்தனர் என தகவல் பரவியது. இவர்களது உடல் மீட்கப்பட்டு தகனம் செய்தபோது அதற்கான செலவைக்கூட செய்யமுடியாத அளவுக்கு வறுமை நிவையிவ்   இரண்டு பேரின் குடும்பமும் இருக்கின்றன.

எனவே, கிராம மக்கள் பணம் திரட்டி , மாணவர்களின் உடலை எரியூட்டினர். இந்நிலையில், 2  நாள் கழித்து  இந்த மாணவர்களுடன் குளிக்க சென்றவர்கள்  இன்று கூறிய தகவல்கள் கிராம மக்களை உலுக்கி  விட்டது. உயிரிழந்த இரண்டு மாணவர்களும் கல்குவாரியில் குளிக்காமல் மேலே அமர்ந்து வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களின் நண்பர்கள் இரண்டு பேர், குவாரி இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடினர். அதனை பார்த்த இந்த மாணவர்கள் லோகேஷ், கவுதம் இருவரும் அவர்களை காப்பாற்ற குவாரியில் குதித்து, இருவரையும் மீட்டு மேலே அனுப்பினர். அவர்களை மேலே அனுப்பிய சில நொடிகளில்,  இவர்கள் இருவரும் வழுக்கி உள்ளே விழுந்து அதே இடுக்கில் சிக்கி உயிரிழந்து விட்டனர்.

இரண்டு நாட்களாக பதட்டத்தில் இருந்த அந்த உயிர் தப்பிய மாணவர்கள் சொன்ன தகவல்கள் தற்போது கிராம மக்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பவத்தின் உண்மை தன்மையை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் தெரியப்படுத்தி அந்த குடும்பங்களுக்கு நிதி உதவி பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். முதன் முதலாக ஒரு பத்திரிக்கை உரிமையாளர் இந்த இரண்டு குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார். இன்று எம்.எல்.ஏ.-க்கள் இந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளனர். தமிழக அரசு இவர்களுக்கு வீர தீரச்செயலுக்கான விருது வழங்க வேண்டும். இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அளிக்க முன் வரவேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News