18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்

முல்லை பெரியாறு, வைகை அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், 18ம் கால்வாயில் தண்ணீர் திறந்து, கண்மாய்களில் நீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2021-07-24 10:15 GMT

முல்லைபெரியாறு அணையில் இருந்து வெளியேறும் நீர்  பைல் படம்

தேனி மாவட்டத்திலும், கேரளாவை ஒட்டி உள்ள இடுக்கி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணை நீர் மட்டம் முழு கொள்ளவை எட்டியது.

அணைக்கு விநாடிக்கு ஏழு ஆயிரத்து நானுாறு கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு தொள்ளாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல் சுருளியாறு, சுரங்கனாறு, கொட்டகுடி ஆறு, மூல வைகை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணை நீர் மட்டம் அறுபத்தி ஒன்பது அடியை எட்டி வருகிறது.

அணையில் இரண்டாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இப்படி  அணைகள் வேகமாக நிரம்புவதால், தண்ணீரை மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களுக்கு திறந்து விட்டுள்ளனர்.

ஐந்து மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர் கே.எம்.அப்பாஸ் கூறியதாவது:  தேனி மாவட்டத்தில் பதினெட்டாம் கால்வாயிலும், பி.டி.ஆர்., கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும்.

தற்போது மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் கால்வாய்களிலும் கண்மாய்களிலும் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இந்த சூழலில் கால்வாய்களில் நீர் திறந்தால் விரைவாக கண்மாய்கள் நிரம்பும்.

மாவட்டத்தில் தற்போது நுாறுக்கும் மேற்பட்ட கண்மாய்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இந்த மழைக்காலத்தில் கண்மாய்களை முழுமையாக நிரப்பினால் மாவட்டத்தின் நிலத்தடி நீர் தேவையும் பூர்த்தியாகும். விவசாயத்திற்கான தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும் என்றார்.

Tags:    

Similar News