பணிகளுக்கு அனுமதி மறுப்பு; செயற்பொறியாளரை கண்டித்து கான்ட்ராக்டர் தீக்குளிக்க முயற்சி

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக செயற்பொறியாளரை கண்டித்து காண்ட்ராக்டர் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2021-08-04 14:45 GMT

தீக்குளிக்க முயன்ற கான்ட்ராக்டர் அழகுராஜா.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு ஒன்றியத்திற்கு உட்பட்டது சிறப்பாறை கிராமம். இங்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பொது நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளை கான்ட்ராக்டர் அழகுராஜா செய்து வந்தார். இந்த பணிக்காக கான்கிரீட் அமைக்க பள்ளம் தோண்டும் பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும், தடுப்புச்சுவருக்கு கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெறவில்லை.

பெரியகுளம் உதவி கோட்ட செயற்பொறியாளர் அனிதா இப்பணிகளை பார்வையிட்டு அனுமதி தர ஆய்வுக்கு வரவில்லை. யூனியன் உதவிப்பொறியாளர்கள் ஆய்வு முடித்து பணிகளை செய்தாலும், அனிதா அதனை ஏற்றுக் கொள்வதில்லை.

கடன் வாங்கி ஒப்பந்தப்பணியில் முதலீடு செய்திருந்த அழகுராஜா, பணிகள் தாமதம் ஆவதால் பெரும் இழப்பீட்டிற்கு உள்ளானார். இதனால் மனம் உடைந்த அவர், இன்று மாலை செயற்பொறியாளர் அனிதாவை கண்டித்து மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு உடலில் தண்ணீர் ஊற்றி முதலுதவி செய்தனர்.

மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 18 கிராம ஊராட்சிகளிலும் இதே நிலை தான் உள்ளது. பணிகள் அனைத்து இடங்களிலும் முடங்கி உள்ளது. கான்ட்ராக்டர்கள் அனைவரும் சிக்கலில்  இருக்கிறோம்.

எனவே இச்சம்பவம் தொடர்பாக செயற்பொறியாளர் அனிதா மீது கான்ட்ராக்டர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் முரளிதரனிடம் புகார் செய்ய உள்ளோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News