தேனி மாவட்டம் கூடலுாரில் குளக்கரையில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்

தேனி மாவட்டம் கூடலுாரில் உள்ள ஒட்டான்குளம் கண்மாய் கரையில் தனியார் மருத்துவமனைகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

Update: 2021-09-12 08:45 GMT

கூடலுார் கண்மாய் கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் மருத்துவக் கழிவுகளை தனியார் மருத்துவமனைகள் கொட்டுவதால் கண்மாய் நீர் கடுமையாக மாசுபடுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்து தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த பிரச்னையே முடிவுக்கு வராத நிலையில், கூடலுாரில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் மருத்துவக் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

மருத்துவக்கழிவுகளை அகற்ற பல்வேறு தனியார் நிறுவனங்களே தங்களது வாகனங்களை அனுப்பி கழிவுகளை சேகரித்து செல்கின்றனர். டாக்டர்களே இந்த வசதிகளை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் இப்படி கழிவுகளை கொட்டுவது வேதனையாக உள்ளது. இதன் மூலம் கண்மாய் நீர் மாசுபட்டு, சாகுபடியில் கூட கடும் பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டிய மருத்துவமனைகளே இந்த சுகாதார சீர்கேட்டுக்கு துணை போனால் எவ்வாறு சுகாதாரத்தை பேண முடியும்  என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு மருத்துவ கழிவுகளை குளத்தின் கண்மாய் கரைகளில் கொட்டும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News