இரண்டாம் போக சாகுபடி: கைகொடுக்கும் முல்லை பெரியாறு அணை நீர் இருப்பு

முல்லை பெரியாறு அணையில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாக தேனி வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Update: 2021-09-23 07:30 GMT

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 129.25 அடியாக இருப்பதால் தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல் இல்லை என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு நீர் பாசனத்தை மட்டுமே நம்பி 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவு இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. 5 ஆயிரம் ஏக்கர் ஒரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. (இது தவிர போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணையில் தனியாக இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன).

மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதல் போகம் அல்லது இரண்டாம் போகம் என ஏதாவது ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே செய்ய முடிந்தது. அந்த அளவு நீர் மேலாண்மை மோசமாக இருந்தது. மழை பொழிவு இருந்தாலும், நெல் சாகுபடி செய்யும்  பருவத்திற்கு ஏற்ப தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 129 முதல் 132 அடி வரை இருந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணை நீர் மட்டம் 129.25 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 687 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வரும் அக்டோபர் முதல் வாரத்தில் முதல் போக நெல் அறுவடை தொடங்கும். அறுவடை நடைபெற்ற உடனே இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் தொடங்கும். இரண்டாம் போக சாகுபடிக்குத்  தேவையான அளவு தண்ணீர் அணையில் தற்போது உள்ளது. நவம்பர், டிசம்பர், ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் கிடைக்கும். எனவே தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகளுக்கு எந்த சிக்கலும் இருக்காது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News