தேனியில் கட்டுமான பணிகள் மும்முரம்: தொய்வின்றி வேலை பெறும் தொழிலாளர்கள்

தேனி மாவட்டத்தில் கட்டுமானத்தொழில் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Update: 2021-09-23 07:30 GMT

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தேனி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால்  கட்டுமான தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான வேலை கிடைத்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் சுமார் 18 மாதங்களுக்கு பின்னர் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. ரியல் எஸ்டேட் தொழில் சற்று பின்னடைவான நிலையில் இருந்தாலும், ஏற்கனவே இடம் வாங்கி போட்டவர்கள் அதிகளவில் வீடுகளை கட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தவிர புதிதாக ஏராளமான வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கட்டும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

இதனால் மாவட்டத்தில் கட்டுமான தொழிலார்களுக்கு வேலை கிடைத்து வருகிறது. தேனியை பொறுத்தவரை பெரியகுளம் ரோட்டோரம் காலை 7 மணிக்கே கட்டுமான தொழிலாளர்கள் வந்து நின்று விடுவார்கள். கொத்தனார்கள் உட்பட கான்ட்ராக்டர்கள் அங்கு வந்து தங்களுக்கு இன்றைய தினம் எத்தனை பேர் தேவை என கணக்கெடுத்து அவர்களை கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

முந்தைய காலங்களில் தொழிலாளர்கள் காலை 7 மணிக்கு வந்து நின்றால் 9 மணி முதல் 9.30 மணி வரை யாராவது வந்து நம்மை வேலைக்கு கூப்பிட மாட்டார்களா என காத்துக்கிடப்பார்கள். பல நாட்களில் யாரும் வேலைக்கு கூப்பிடாத நிலையில் திரும்பக்கூட செல்வார்கள். தற்போது தொழிலாளர்கள் வந்து நிற்கும் அரை மணி நேரத்தில் அந்த இடமே காலியாகி விடுகிறது. யாராவது தொழிலாளர்கள் வருவார்களா? என கொத்தனார்கள் காத்திருந்து தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் நிலை காணப்படுகிறது. அந்த அளவு கட்டுமான பணிகள் துரிமாக நடக்கிறது. எங்களுக்கு சம்பளமும் அதிகம் கிடைக்கிறது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News