வெள்ள பாதிப்பு கையாண்ட விதம் சிறப்பு: தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு

தமிழக அரசு வெள்ள பாதிப்பினை கையாண்ட விதம் சிறப்பாக உள்ளது என மத்திய குழு பாராட்டு தெரிவித்து உள்ளது.

Update: 2023-12-12 16:13 GMT

தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளக்காடானது. சாதாரண சந்து தெரு முதல் சென்னை அண்ணாசாலை வரை தண்ணீர் நிரம்பி ஏரி போல் காட்சி அளித்தது.

மாநகரை விட புறநகர் பகுதிகளில் தான் பாதிப்புகள் அதிகமாக இருந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப நான்கைந்து நாட்களுக்குமேல் ஆனது.யாரும் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இருளில் உணவின்றி, பாலின்றி பெரியோர் முதல் கைக்குழந்தைகள் வரை தவித்துப் போய்விட்டனர்.

சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன. கார் முதல் வீட்டின் அடித்தளத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டதால் மக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து தங்கள் வாழ்நாள் உழைப்பின் மூலம் சேர்த்த பொருட்களை இழந்தனர். இந்நிலையில் இப்போது சென்னையில் பழையபடி இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனாலும் இன்னும் பல பகுதிகளில் வெள்ள நீர் முழுமையாக வடியவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் படகி் செல்லவேண்டிய நிலை தான் உள்ளது.

சென்னையில் வெள்ளப்பாதிப்பை சீரமைக்க ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி முதல் கட்டாக ரூ.450 கோடியும், இரண்டாவது கட்டமாக மேலும் ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

மேலும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் மத்திய குழுவினரும் சென்னைக்கு வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தச் சூழலில் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு சென்னை அனுப்பி வைத்தது. அந்தக் குழுவில் ஏ.கே.சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, ரங்கநாத் ஆதம், விஜயகுமார், திமன்சிங் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இதனிடையே சென்னை வந்த மத்திய குழுவிடம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பாதிப்பு விவரங்களை எடுத்துரைத்தார். மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மத்திய குழுவை சில இடங்களுக்கு நேரிலேயே அழைத்துச் சென்றார்.

அந்த குழுவினர் வடசென்னை மற்றும் தென் சென்னை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். ஆய்விற்கு பின்னர் குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்  கூறியதாவது:-

2015ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சென்னையில் இப்போது மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதுமட்டுமல்ல, இவ்வளவு பெரிய புயல், மழை, வெள்ளத்திலும் உயிர்சேதம் ஏதும் அதிகமில்லை என்பதையும் பார்க்க வேண்டும். தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளை கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. அதேபோல் புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News