நடிகர் இளவரசு மீதான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் முடித்து வைப்பு

நடிகர் இளவரசு மீதான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.

Update: 2024-02-20 16:46 GMT

நடிகர் இளவரசு.

ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு வழக்கில் காவல்துறைக்கு எதிராக நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம், அதன் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. இந்த புகார் மீதான விசாரணையை விரைவாக முடித்து, நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் போலீசார் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி காவல் நிலையத்தில் இளவரசு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருப்பதாகக் கூறி, கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் சமர்ப்பித்தனர்.

இதற்கு இளவரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 12 ஆம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகவும், காவல்துறையின் சிசிடிவி காட்சிகள் போலியானவை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, குறிப்பிட்ட நடிகர் இளவரசு அந்த தேதியில் எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் டவர் விவரங்கள், சிடிஆர் விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா காவல் துறைக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு கடந்த ஜனவரி 29 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை மொபைல் டவர் விவரங்கள் மற்றும் சிடிஆர் விவரங்களை தாக்கல் செய்தது. அப்போது இளவரசு தரப்போ, அவர் 12 ஆம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காவல் துறை சமர்ப்பித்த விவரங்களில் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரானததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் எனவும் நீதிபதி கடிந்துகொண்டார்.

இளவரசு மன்னிப்பு கோரினால் அதை ஏற்க தயாராக இருப்பதாக கூறிய நீதிபதி, தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இளவரசு மன்னிப்பு கோரி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். போலீசும் அந்த விவகாரத்தை கைவிட ஒப்புக்கொண்டது. இதனை அடுத்து சங்கத்தில் முறைகேடு நடப்பதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி முடிக்கப்படவில்லை என்றார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக காவல் ஆய்வாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் வழக்கை விசாரிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதாக அரசு தரப்பு விளக்கம் அளித்தது. புகார் தொடர்பாக மீண்டும் உதவி ஆணையர் விசாரணை மேற்கொள்ள உள்ளார் என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார். இதை கேட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

Tags:    

Similar News