வறுமையை ஒழிக்க தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தாயுமானவர் திட்டம்

வறுமையை ஒழிக்க தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தாயுமானவர் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Update: 2024-05-23 12:42 GMT

பட்ஜெட் தாக்கலின் போது தாயுமானவர் திட்டத்தை படித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் தாயுமானவர் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஏழை குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை பிப்ரவரி 19-ல் பட்ஜெட் தாக்களின் போது அறிவித்தது. இதற்காக 27 ஆயிரத்து 922 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் 5 லட்சம் ஏழை  குடும்பங்களை வறுமையில் இருந்து ஒழிக்க இச்சட்டம் உதவும் என்று பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர் தனித்து வசிக்கும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளின் கல்வி, வேலை வாய்ப்பு திறன் மேம்பாடு, வீடுகள் போன்றவை வழங்கப்படும். முதலில் சோதனை அடிப்படையில் ஐந்து மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான  ஜூன் 3 அல்லது தேர்தல் நடத்தை விதிகள் தடுக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் ஏதாவது ஒரு நாளில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அரசு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய அரசின் நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் சதவீதம் மிகக் குறைவாக 2.2% மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளது. இப்போது மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏழை குடும்பங்களை எந்த அடிப்படையில் எவ்வாறு கண்டறிய வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். முதலில் சோதனை அடிப்படையில் ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .அவை எந்தெந்த மாவட்டங்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே ஏழை குடும்பங்களை எந்த அடிப்படையில் கண்டறிவது என்பது குறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கான பயிற்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

Tags:    

Similar News