விசாரணை கைதி சிறையில் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

போலீசார் தாக்கியதால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்தாரா என்ற சந்தேகம் உறவினர்களுக்கு ஏற்பட்டதால் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.;

Update: 2023-06-15 09:07 GMT

சிறையில் உயிரிழந்த தங்கச்சாமி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாடசாமி என்பவரது மகனான தங்கசாமி (வயது 26)என்பவரும், அவரது பாட்டியான முப்பிலிமாடசாமி என்பவரும் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக கூறி புளியங்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட தங்கசாமி இன்று உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.தங்கசாமியை போலீசார் கடுமையாக தாக்கி சிறையில் அடைத்ததால் தான் அவர் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள்  புளியங்குடி பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த  இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், தற்போது தென்காசி மாவட்டத்தில் போலீசார் பற்றாக்குறை நிலவி வருவதன் காரணமாக அந்த பகுதியில் தேவையான போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியாததன் காரணமாக போராட்டம் நடக்கும் இடத்திற்கு தேவையான காவலர்களை உடனடியாக அனுப்பி வைக்கமுடியவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இதனால் போராட்டம் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால்,திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், போராட்டம் நடத்திய உறவினர்களிடம் வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அந்த பகுதியில் இருந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். போலீசார் தாக்கியதால் தான் இளைஞர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அதன் பின்னர் போலீசார் வானங்களை ஒழுங்குபடுத்தி வரிசையாக செல்ல வைத்தனர். பின்னர் போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News