ஊர் கட்டுப்பாடு என்று கூறி தின்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம்: ஆட்சியர் விளக்கம்

இது தொடர்பாக மகேஷ் என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடை சங்கரன்கோவில் வட்டாட்சியரால் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது

Update: 2022-09-18 01:30 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்  

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், பெரும்புத்தூர் கிராமம், மஜரா பாஞ்சாகுளத்தில் பட்டியல் இன பறையர் சமுதாய மக்களின் குழந்தைகளுக்கு யாதவர் இனத்தைச் சேர்ந்தவரின் கடையில் எவ்வித திண்பண்டங்களும் வழங்க கூடாது என கூறி வாட்ஸ்-அப்- மூலம் வீடியோ பதிவு பரவியதை தொடர்ந்து, உடனடியாக விசாரணை செய்யப்பட்டதில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், பெரும்புத்தூர் கிராமம் மஜரா பாஞ்சாகுளத்தில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு யாதவர் சமுதாயம் மற்றும் பட்டியல் இன (பறையர்) சமுதாய மக்களுக்கு இடையே நடந்த பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர் வழக்கானது இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது

தற்போது யாதவர் சமுதாயத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் ராமகிருஷ்ணன் என்பவர் மத்திய அரசு பணிக்கு தேர்வாகியுள்ள நிலையில் யாதவர் சமுதாய மக்கள் பட்டியலின சமுதாய மக்களிடம் சென்று ராமகிருஷ்ணன் என்பவர் மேல் உள்ள வழக்கினை வாபஸ் பெற கேட்டுள்ளனர் இதற்கு பறையர் சமுதாய மக்கள் தங்கள் சமுதாயத்தினர் மேல் யாதவர் சமுதாய மக்களால் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால் மட்டுமே பதிலுக்கு ராமகிருஷ்ணன் (இந்துயாதவர்) மேல் போடப்பட்டுள்ள வழக்கினை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கிராமத்தில் உள்ள யாதவர் சமுதாய நாட்டாண்மை சு. மகேஷ்  என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில்  பட்டியலின சமுதாய சிறுவர் சிறுமிகள் திண்பண்டங்கள் கேட்டதற்கு தர மறுத்துள்ளதாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வரப்பெற்றுள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலைய குற்ற எண்.377/2022 பிரிவு 153 Class A IPC நாள் 17.09.2022 ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் மகேந்திரன் மற்றும் இராமச்சந்திரன் என்ற மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேற்கண்ட சம்பவம் குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 133(1) (ஆ) ன் கீழ் வருவதால் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், பெரும்பத்தூர் கிராமம் மஜரா பாஞ்சாங்குளம் கிராமம் மகேஷ்  என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடை சங்கரன்கோவில் வட்டாட்சியரால் (17.09.2022) தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்  தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News