யூனிபார்மில் டாஸ்மாக் கடை முன்பு போதையுடன் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்
சங்கரன்கோவில் அருகே போதையில் டாஸ்மாக் கடை முன்பு மதுபாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட முதல்நிலை காவலர் ராஜகுரு;
மதுபாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட முதல்நிலை காவலர் ராஜகுரு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி காவல்சரகத்திற்குட்பட்ட கடையநல்லூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் முதல்நிலை காவலர் ராஜகுரு. இவர் தற்போது புளியங்குடி பகுதிகளில் உள்ள காவல் ரோந்து வாகனத்தில் பணி செய்து வருகிறார்.
ராஜகுரு இன்று சேர்ந்தமரம் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்து விட்டு சீருடையில் மது பாட்டிலுடன் அப்பகுதியாக சென்றவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைதொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் சேர்ந்தமரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் மதுபோதையில் இருந்த முதல்நிலை காவலர் ராஜகுருவை அழைத்து சென்றனர். பின்னர் காவல் ரோந்து வாகனத்திற்கு சென்று தன்னுடைய பணியை செய்து வருகிறார். மது போதையில் ரகளையில் ஈடுபட்ட காவலர் ராஜகுரு மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக சேர்ந்தமரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினரே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதி காவலர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது