அரசு மாணவர் விடுதியில் நைட்டியுடன் ஆசிரியை; பணி இடைநீக்கம் செய்யப்பட்ட விடுதி காப்பாளர்

சங்கரன்கோவில் அருகே மாணவர் விடுதியில் பெண் ஆசிரியை நைட்டியுடன் இருந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து விடுதி காப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-10-12 15:45 GMT

விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம் ( மாதிரி படம்)

தென்காசி அருகே அரசு மாணவர்கள் விடுதியில் வார்டனுடன், நைட்டி உடையில் ஆசிரியை இருந்த காட்சி சர்ச்சையான நிலையில் வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அனுமதியின்றி ஆசிரியை விடுதி உள்ளே நுழைந்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் உள்ள சுவாமிநாதபுரத்தில் ஞானசுந்தரி அம்மாள் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி மாணவர்களுக்காக சாமிநாத புரத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு கீழ் விடுதியானது இயங்கி வருகிறது.

இந்த விடுதியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருக்கும் நிலையில் ஹாஸ்டல் வார்டனாக ராஜ்மோகன் என்பவர் பணிபுரிந்து வந்தார். பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சுப்புலட்சுமி(56) என்பவரும் மாலை வேளையில் விடுதிக்கு வந்து செல்லக்கூடிய வீடியோ காட்சிகள் வெளியாகி கேள்வியை எழுப்பி உள்ளது.

மாணவர்கள் இருக்கக்கூடிய விடுதியில் அனுமதியின்றி நைட்டி உடையில் அதிகாரத்துடன் செயல்படுவது, மாணவர்களை அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் ஹாஸ்டல் வார்டன் ராஜ்மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆசிரியை சுப்புலட்சுமி அனுமதியின்றி விடுதியில் நுழைந்ததாக கரிவலம் வந்த நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியை வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Similar News