கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு: போலீசாரை கண்டித்து விசிகவினர் சாலை மறியல்

குறிஞ்சாங்குளம் கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுத்த காவல்துறையினரை கண்டித்து விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-04 13:15 GMT

திருவேங்கடம்- கோவில்பட்டி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை குறிஞ்சாங்குளம் கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுத்த காவல்துறையினரை கண்டித்து திருவேங்கட பகுதியில் விசிக வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் பகுதியில் ஆதிதிராவிட சமூக மக்களுக்கு அப்பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி மறுத்த நிலையில் அனுமதி வேண்டி கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் அப்பகுதி கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கிராமத்திற்கு வருகை தர முற்பட்டபோது அவர்களை திருவேங்கடம் பகுதியில் கிராமத்திற்குள் செல்ல அனுமதியில்லை என காவல்துறையினர் கூறியதால் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் சதுரகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கதிரேசன் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் ஆகியோர் தலைமையிலான விசிகவினர் 30 க்கும் மேற்பட்டோர் திருவேங்கடம்- கோவில்பட்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து திருவேங்கடம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Tags:    

Similar News