சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாகுளத்தில் இரு பிரிவினர் இடையே மோதல்: கல்வீச்சு

சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாகுளத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால் பதற்றம்.

Update: 2022-03-08 04:15 GMT

குறிஞ்சாகுளத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல்  

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாகுளத்தில் காந்தாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இரு பிரிவினரிடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது.

இதனிடையே கடந்த மாதம் குறிஞ்சாக்குளம் விளையாட்டு மைதானத்தில் விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு பிரிவினர் அங்கு விழா நடத்தினர்.

இந்நிலையில் இன்று மற்றொரு பிரிவினர் குறிஞ்சாகுளத்தில் உள்ள காலி மைதானத்தில் அங்கன்வாடி பள்ளி கட்டிடம், ஆரம்ப சுகாதார நிலையம்,  ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். பின்னர் குறிஞ்சா குளத்திற்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பிரிவினர் தங்கள் பகுதியில் கட்சி கொடியை ஏற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மற்றொரு பிரிவினர் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்க முற்பட்டனர். இதனால் அவர்கள் பின்வாங்கி ஓடும் போது தடுக்கி கீழே விழுந்தனர். உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். இதையடுத்து அங்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் குறிஞ்சா குளத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News