சங்கரன்கோவிலில் மது போதை தகராறில் டீ கடைக்கு தீ வைப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் மது போதை தகராறில் டீ கடைக்கு தீ வைத்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சங்கரன் கோவிலில் தீயணைப்பு துறையினர் டீ கடையில் எரிந்த தீயை அணைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மேல ரத வீதியில் சங்கர் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். தீபாவளி தினமான இன்று கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடையில் முன்பு சங்கர் மற்றும் அவர் நண்பர்கள் நின்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது சங்கரன்கோவில் அருகே உள்ள ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அவர் மது போதையில் இருந்ததால் சங்கர் மற்றும் நண்பர்கள் அனைவரும் அவரிடம் சண்டை வராமல் இருப்பதற்காக அந்த இடத்தைவிட்டு கிளம்பி சென்றுள்ளனர். இந்தநிலையில் சங்கரின் டீக்கடைக்கு கருப்பசாமி தீவைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைவாக தீயை அணைத்ததால் பெரும் அளவிலான அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து சங்கரன்கோவில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்..