சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவில் தமிழக அரசு விதித்த கொரோனா விதிமுறை மீறல்

சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா தமிழக அரசு விதித்த விதிமுறைகளை மீறி நடைபெற்றது.

Update: 2021-07-23 13:45 GMT

ஆடித்தபசு திருவிழாவில் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி தந்த கோலம்.  

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி கோவிலின் உட்பிரகாரத்தில் சிறப்பாக நடைபெற்றது.


தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலும் ஒன்று. இங்கு சிவன் வேறு விஷ்ணு வேறு என்று இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சர்ச்சையை போக்கும் வகையில் சிவபெருமான் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுத்த திருக்கோலம் ஆடித்தபசு திருவிழா ஆகும்.

இத்திருவிழாவிற்கு தென் மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொள்வர். இந்நிலையில்  கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு திருவிழா பக்தர்கள் இல்லாமல் கோவிலில் நடைபெற்றது. தற்போது இந்த ஆண்டு கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் 50 பேருக்கு மிகாமல் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒவ்வொரு திருவிழாவும் நடந்து வந்த நிலையில் இன்று விழாவின் சிகர நாளான ஆடித்தபசு திருவிழா நடைபெற்றது. 

காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு மேல் விழாவின் உச்ச நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழாவில் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி தரும் வைபவம் கோவிலின் உட்பிரகாரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனாலும்  இந்நிகழ்வு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படாமல் நடந்தது. கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் நிலவி வரும் சூழலில் பக்தர்கள் கூட்டமாக கலந்து கொண்டது சமூக இடை வெளியை காற்றில் பறக்கவிட்டது போல ஆயிற்று. 

இந்த விழாவில்  500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:    

Similar News