கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி

Update: 2021-01-29 05:30 GMT

திருவேங்கடம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை அடுத்த அழகனேரி அருகேயுள்ள மேலரங்கையாபுரத்தை சேர்ந்தவர் வரதராஜன் மகள் விஷ்ணுலட்சுமி (10). அழகனேரியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். வரதராஜன் ஊருக்கு அருகேயுள்ள தனது தோட்டத்தில் மலர் சாகுபடி செய்திருந்தார். சம்பவத்தன்று காலை, விஷ்ணு லட்சுமியும், அவரது தாயும் தோட்டத்திற்கு பூ பறிக்கச் சென்றனர். பின்னர் வெளியே சென்ற விஷ்ணுலட்சுமி, நீண்டநேரமாகியும் தோட்டத்திற்கு திரும்பவில்லை.

இதனால் பதறிய சிறுமியின் தாய், தோட்டத்தின் அருகே சுற்றுச்சுவர் இல்லாதநிலையில் உள்ள கிணறு அருகே சென்றபோது மகள் அணிந்திருந்த செருப்பு கிடந்தது கண்டு திடுக்கிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து வீட்டில் உள்ள கணவரிடம் கூறினார். இதையடுத்து வரதராஜன், ஊரில் உள்ள ஆட்களை அழைத்துக்கொண்டு வந்து மகளை தேடும் பணியில் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த குருவிகுளம் காவல்துறையினர், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் மற்றும் வீரர்கள் துணையுடன் சிறுமியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கால் கழுவச்சென்ற போது கிணற்றில் தவறிவிழுந்த சிறுமி, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

Tags:    

Similar News