தென்காசி அருகே சட்டவிரோதமாக புகையிலை பதுக்கல்: ஒருவர் கைது
தென்காசி அருகே சட்டவிரோதமாக புகையிலை பதுக்கிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
தென்காசி மாவட்டம், தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது புளியரை. இந்த ஊரின் வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன.
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் விளையும் காய்கறிகள், மற்றும் திருநெல்வேலி பகுதியில் உள்ள சிமெண்ட் உற்பத்தி செய்யப்படும் ஆலையிலிருந்து சிமெண்டும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்தும் அதிகமான போக்குவரத்து கேரள மாநிலத்திற்கு சென்று வருகிறது.
எனவே இப்பகுதியில் அதிகமான ரேஷன் அரிசி, கனிம வளங்கள், போதை பொருட்கள், ஹவாலா பணங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இரு மாநில சோதனைச் சாவடிகளையும் கடத்துவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புளியரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லாலா குடியிருப்பு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல்துறை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பால்துரை என்பவரது மகன் முத்துக்குமார் சட்ட விரோதமாக வீட்டில் 33 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
புகையிலை பொருட்களை கைப்பற்றிய காவல்துறையின் விசாரணையின் போது முத்துக்குமார் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டு புளியரை காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்தனர்.