சாம்பவர் வடகரை பேருந்து நிலையம் அருகே பயங்கர தீ விபத்து
கடையநல்லூர் அருகே, சாம்பவர் வடகரை பேருந்து நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.;
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை பேருந்து நிலையம் அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பிலான காலியிடம் ஒன்று உள்ளது. அங்கு, வைக்கோல்களை அந்தப் பகுதி விவசாயிகள் அடுக்கி வைத்திருந்தனர்.
இந்நிலையில், வைக்கோல்கள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் தீயானது கட்டுக்குள் வராமல் மென்மேலும் பரவ தொடங்கியது. உடனே தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தால் அந்த காலி இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 ஆயிரம் மாடுகள் உண்ணக்கூடிய அளவிலான வைக்கோல்கள் எரிந்து சாம்பலாகி விட்டன. இந்த சம்பவம் குறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.