செங்கோட்டை அருகே மீண்டும் வயல்வெளியில் புகுந்த யானைகள்: விவசாயிகள் கவலை

செங்கோட்டை அருகே மீண்டும் வயல்வெளிகளில் யானைகள் புகுந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-09-16 07:10 GMT

செங்கோட்டை அருகே வயல்வெளியில் உலா வரும் காட்டு யானைகள்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கிராமத்தில் அதிகளவு நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில், நேற்று இரவு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இரண்டு யானைகள் வயல்வெளிக்குள் புகுந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை காட்டு யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்திக்கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள்  உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் யானையை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது யானை அருகே உள்ள குளத்தில் உள்ள புதர்களில் சென்று மறைந்து கொண்டது.

தற்போது வரை புதர்களில் மறைந்துள்ள காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் புதர்களில் பதுங்கி கொண்ட யானைகள், தற்போது எந்தவிதமான பயமும் இல்லாமல் ஆனந்த குளியல் போட்டு கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News