பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவிக்கு கண்டனம் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-03-24 01:16 GMT

சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்.

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டமானது நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு கவுன்சிலராக பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து கொண்டிருந்தபோது, 15 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ள ரபீக் ராஜா என்பவர் வருகை தந்த போது, வாயில் கருப்பு துணி கட்டியவாறு கையில் பதாகை ஏந்தி பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

அந்த பதாகையில், கெடுக்காதே கெடுக்காதே தளபதி ஆட்சியின் நற்பெயரை கெடுக்காதே என்ற வாசகங்கள் இருந்தன.

தொடர்ந்து, அவர் பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு சென்றபோது, பத்திரிக்கையாளர்களும் உள்ளே வர வேண்டும், அப்பொழுதுதான் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என கூறி பத்திரிகையாளர்களை உள்ளே அழைத்து சென்றார்.

உடனே, அங்கு வந்த போலீசார் பத்திரிக்கையாளர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என பேரூராட்சி செயலாளர் காயத்ரி கூறியுள்ளதாக போலீசார் தெரிவிக்கவே, பத்திரிக்கையாளர்களை உள்ளே வரக்கூடாது என்று சொல்வதற்கு செயல் அலுவலர் அல்ல யாரும் கூற முடியாது என்றும், இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளது என கூறி ரபீக் ராஜா பிரச்சினையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, நகர்மன்ற கூட்டமானது நடைபெற்ற சூழலில், கூட்டத்தின் போது திமுக பேரூராட்சி தலைவியாக உள்ள சீதாலட்சுமி என்பவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் 8 பேர் பிரச்சினையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, பலத்த சத்தத்துடன் சண்டை இடுவது போல் நடைபெற்ற பேரூர் மன்ற கூட்டத்தின் போது, பிரச்சனையில் ஈடுபட்டவர்களை வெளியே போ என்று நகர்மன்ற தலைவி கூறியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து எங்களை வெளியே போக சொல்வதற்கு நீங்கள் யார் எனக்கூறி தொடர்ந்து கவுன்சிலர்கள் பிரச்சினையில் ஈடுபட்ட சூழலில், பேரூர் மன்ற தலைவி சீதாலட்சுமி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

தொடர்ந்து, திமுக கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேரூர் மன்ற அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News