தென்காசி அருகே தகாத உறவினால் கல்லூரி மாணவர் கொலை: தாய், மகள், மகன் கைது
தென்காசி அருகே தகாத உறவினால் கல்லூரி மாணவர் கொலையான வழக்கில் தாய், மகள், மகன் கைது செய்யப்பட்டனர்.;
கொலை செய்யப்பட்ட மது என்கிற மாடசாமி.
தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பராமரிப்பு பணி மேற்கொண்ட போது, அவரது வீட்டில் இருந்த செப்டிக் டேங்கிற்குள் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து எலும்பு கூடாக மீட்கப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்து செப்டிக் டேங்கிற்குள் போட்டது யார்? மேலும், இலத்தூர் பகுதியில் அதிக நாட்கள் காணமால் போன நபர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்திய போது, இலத்தூர் பகுதியை சேர்ந்த மது என்ற மாடசாமி எனும் கல்லூரி மாணவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததும், அது தொடர்பான வழக்கு இலத்தூர் காவல் நிலையத்திலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
உடனே, அந்த கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூட்டில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ.வையும், காணாமல் போன.கல்லூரி மாணவரான மதுவின் உறவினர்களிடமிருந்து எடுக்கப்பட்ட டி.என்..ஏவையும் சோதனை செய்தபோது இரண்டும் ஒத்து போனது.
தொடர்ந்து, மது எப்படி கொலை செய்யப்பட்டார்? அவரை செப்டிக் டேங்கிற்குள் புதைத்தது யார்? என்பது குறித்து மது வீட்டில் அருகே உள்ள அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது மது காணாமல் போன நாள் முதல் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் குடும்பத்துடன் கோவைக்கு வேலைக்கு சென்றதும், அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது என அக்கம் பக்கத்தினர் பரவலாக தெரிவித்துள்ளனர்.
உடனே கோவை விரைந்த இலத்தூர் போலீசார் குடும்பத்துடன் கோவையில் இருந்த மாரியம்மாள், பேச்சியம்மாள் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட மூவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அதாவது கல்லூரி மாணவரான மாடசாமி (எ) மதுவுக்கும், அவரது வீட்டின் எதிரே உள்ள திருமணமான பேச்சியம்மாள் (வயது 24) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்த நிலையில், இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் தனிமையில் இருந்தபோது மது தனது செல்போனில் இருவரின் தனிமையை வீடியோவாக எடுத்து அதை வைத்து பேச்சியம்மாளை மிரட்டி அடிக்கடி உறவு கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில், மதுவின் தொந்தரவு அதிகமாகவே பேச்சியம்மாள் இந்த சம்பவம் தொடர்பாக அவரது தாயார் மாரியம்மாளிடம் நடந்ததை கூறியுள்ளார்.
மேலும், இந்த விஷயத்தை மது தனது கணவரிடம் கூறினால் தனது வாழ்க்கை பாழாகிவிடும் என கூறியதையடுத்து இருவரும் திட்டமிட்டு மதுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, மதுவை தனிமையில் சந்திக்க பேச்சியம்மாள் அழைத்துள்ளார். அப்போது, மதுவிடம் பேச்சியம்மாள் ஒரு ஆபாச வீடியோவை காட்டி அது போல தாம் உறவு கொள்வோமா என கேட்டுள்ளார்.
உடனே மதுவும் ஆம் என்று கூற அந்த ஆபாச வீடியோவில் இருந்த காட்சிகளை போல் மதுவின் கைகால்களை பேச்சியம்மாள் கட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து மதுவிடம் உறவு வைத்து கொள்வது போல் நடித்து அவரது கழுத்தை நெரித்து தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர், மதுவின் உடலை பேச்சியம்மாள் மற்றும் அவரது தாயான மாரியம்மாள், அவரது சகோதரர் ஆகியோர் உதவியுடன் லட்சுமணன் வீட்டின் செப்டிக் டேங்கில் போட்டு மதுவின் உடலை மூடியதும் தெரியவந்தது.
தொடர்ந்து, மதுவை திட்டமிட்டு கொலை செய்த பேச்சியம்மாள், மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரர் தங்கபாண்டி உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மூவரையும் செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.