தமிழக - கேரளா எல்லையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை
தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள புளியரை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.;
இரவில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையால் சோதனை நடைபெற்ற போக்குவரத்து தணிக்கை சோதனைச் சாவடி.
தமிழகம் முழுவதும் நேற்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சுவடிகளில் அதிகமான லஞ்சம் பெறுவதாக புகார் தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மதியழகன் தலைமையிலான 5 பேர் கொண்ட போலீசார் மற்றும் ஒரு தாசில்தார் அடங்கிய குழுவினர் புளியரை சோதனை சாவடியில் மேற்கொண்ட சோதனையின் போது, சோதனை சாவடியில் உள்ள அறைகள் மற்றும் ஆவணங்களை முழுமையாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்பொழுது, சோதனை சாவடி மையத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ.16 ஆயிரத்து 180 இருந்தது தெரியவந்தது.
அதனைதொடர்ந்து, பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது முறையான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து போக்குவரத்து சோதனை சாவடியில் இருந்த பணம் மட்டும் ஆவணங்களை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர், சோதனையின் போது பணியில் இருந்த முனியாண்டி, செந்தில் பாண்டியன், செல்வ கணேஷ் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.