வாவா நகரப் பகுதியில் புகுந்த காட்டு யானைகளால் 1200 வாழைகள் சேதம்; விவசாயிகள் கவலை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது காட்டுப் பகுதியில் இருந்து விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

Update: 2024-09-05 03:16 GMT

 காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை மரங்களை படத்தில் காணலாம்.

வாவாநகரம் வனப்பகுதியில் காட்டு யானைகளால் 1200 ரோபஸ்டா வாழை மரங்கள் சேதமானது. வன விலங்குகளிடம் இருந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்க நிரந்தரவு தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

தென்காசி மாவட்டத்தில் சிவகிரி முதல் புளியரை வரை உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நெல், மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா போன்றவற்றை விவசாயம் செய்து வருகின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விளை நிலங்களில் அடிக்கடி யானை, கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் புகுத்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.


இந்நிலையில், வாவா நகரம் கிராமத்தை சேர்ந்த சலீம் என்ற விவசாயி தனது நிலத்தில் ரோபஸ்டா ரக வாழை, கொய்யா, நெல்லி போன்றவற்றை விவசாயம் செய்து வரும் நிலையில், நேற்று இரவு காட்டு யானை அவரது விளை நிலத்தில் புகுந்து சுமார் 1200 வாழை மரங்களை அழித்துள்ளது. செவ்வாழை சாகுபடி செய்யும் போது யானையினால் அதிக நஷ்டத்தை சந்தித்ததாகவும், உயரம் குறைவான ரோபஸ்டா வாழை சாகுபடி செய்தால் யானை அட்டகாசம் இருக்காது என நினைத்து ரோபஸ்டா ரக வாழையை பயிரிட்டுள்ளார். ஆனால் குழை தள்ளும் நிலையில் வாழை மரங்களை காட்டு யானை அழித்ததால் அப்பகுதியில் உள்ள கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் இரவு நேரத்தில் உயிரை பணயம் வைத்து காவல் காக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வனங்களை ஒட்டி அகழி, மின்வேலி அமைத்து இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வனத்துறையில் போதுமான ஆட்களை நியமித்து, வனவிலங்குகளை அப்புறப்படுத்துவதற்கான கருவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் விவசாயம் தவிர்த்து வேறு வேலை தேடி செல்ல வேண்டும். இல்லையென்றால் தற்கொலை தான் செய்ய வேண்டும் என விவசாயிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.

Similar News