தென்காசி அருகே நாவல் மரத்திலிருந்து வெளியேறும் தண்ணீர்: பொதுமக்கள் வியப்பு
தென்காசி அருகே நாவல் மரத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரை பார்த்து பொதுமக்கள் வியப்படைந்துள்ளனர்.
தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், மருதம், புளியமரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் சாலையின் இருபுறம் அமைந்துள்ளது.
இந்நிலையில், தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பகுதியில் சாலையின் ஓரத்தில் உள்ள பழமையான நாவல் மரத்தில் இருந்து கடந்த 2 நாட்களாக தண்ணீர் கொட்டுகிறது. இதனை அப்பகுதியில் உள்ளவர்களும், வாகன ஓட்டிகளும் ஆச்சர்யத்துடன் கண்டு அலைபேசியில் படம் எடுத்து செல்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை நீரானது மரத்தின் இடையில் உள்ள பள்ளத்தில் நீர் சேர்ந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.