ஆழ்வார்குறிச்சியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த மூன்று பேர் கைது

ஆழ்வார்குறிச்சியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-28 07:21 GMT

ஆழ்வார்குறிச்சியில் சட்டவிரோதமாக அரிவாள், ஆயுதங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மூன்று பேர்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் காவல் துறையினரின் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்போர் போன்ற நபர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பழைய குற்றவாளிகள்,குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருப்போரின் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பான்குளம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்த போது சடையன் (70) என்பவருக்கு சொந்தமான இரும்பு பட்டறையில் 50 பழைய அரிவாள்,15 புதிய அரிவாள்,2 வாள் கைப்பற்றப்பட்டது.

அதே பகுதியில் உள்ள லட்சுமி சங்கர் என்பவரின் பட்டறையில் இருந்து 10 அரிவாள் கைப்பற்றப்பட்டது. மேலும் மடவார்விளாகத்தை சேர்ந்த சேகர் என்பவரின் பட்டறையில் இருந்து 30 அரிவாள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News