37 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட கோவில் விக்ரகங்கள்

ஆழ்வார்குறிச்சி ஆவுடையம்மாள் சமேத நரசிங்கநாத சுவாமி திருக்கோவில் சிலைகள் 37 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கவில் இருந்து மீட்கப்பட்டது.

Update: 2022-06-18 04:00 GMT

கோயில் நிர்வாகிகளிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்ட காட்சி.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் பழமைவாய்ந்த ஆவுடை அம்மாள் சமேத நரசிங்கநாதசுவாமி கோயிலில் நந்திகேஷ்வரர், கங்காளமூர்த்தி உலோக சிலைகள் திருட்டு போயின. இவை உட்பட பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான திருட்டு போன சிலைகள் வெளிநாடுகளில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதான சிலைகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவர சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி அமெரிக்கா நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து நடராஜர், நந்திகேஸ்வரர், கங்காலமூர்த்தி, விஷ்ணு, பார்வதி, சிவன் உலோக சிலைகள் என மொத்தம் 10 சிலைகள் கடந்த 5-ம் தேதி தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

பின்னர் ஆழ்வார்குறிச்சி கோயிலில் திருடுபோன நந்திகேஷ்வரர், கங்காளமூர்த்தி உலோக சிலைகளை கோயில் செயல் அலுவலர் கண்ணதாசனிடம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த்முரளி, ஐஜி தினகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலையில் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

அதன்பின்னர் பலத்த போலீசார் பாதுகாப்புடன் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள அருள்மிகு ஆவுடை அம்மாள் சமேத நரசிங்கநாதர் திருக்கோவிலில் 1985 -ம் ஆண்டு பல லட்சம் மதிப்புள்ள இரு உலோக சிலை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் 37 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டு மீண்டும் திருக்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டதால் பக்தர்கள் வரவேற்ப்பு கொடுத்தனர்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது மேலும் பாதுகாப்பு நலன் கருதி கோவில் சிலையை கோவில் நிர்வாக அதிகாரி பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

Tags:    

Similar News