ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பிரசாதமாக பக்தர்களுக்கு புரோட்டா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவில் நிறைவு நாளில் பக்தர்களுக்கு புரோட்டா பிரசாதமாக வழங்கப்பட்டது.

Update: 2024-09-19 15:28 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நிறைவு நாளன்று பிரசாதமாக புரோட்டா வழங்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர்.

ஆலங்குளத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாத கடைசி மற்றும் புரட்டாசி முதல் வாரத்தில் திருவிழா நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, 1008 குடம் மஞ்சள் தண்ணீர் அபிஷேகம் என நாள் தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் புதன் கிழமை இரவு 207 பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு படையல்களுடன் சாம பூஜை நடைபெற்றது. அப்போது ஸ்ரீ பத்திரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

‌ கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் என பிரசாதம் வழங்கப்பட்டுவது வழக்கம். ஆனால் இக்கோயில் திருவிழா நிறைவு நாளன்று பிரசாதமாக புரோட்டா மற்றும் சென்னா மசாலா வழங்கப்பட்டது. .‌ நள்ளிரவு 12 மணி வரை தயாரான சுமார் 10,000 புரோட்டா, சுடச்சுட பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு புரோட்டாவை வாங்கி சுவைத்தனர்.

சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரைக்கு பதில் பிரசாதமாக புரோட்டா விநியோகம் செய்யப்படுவது தமிழ்நாட்டிலேயே இங்குதான் முதன்முறை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

Tags:    

Similar News