சர்வதேச யோகா தினம்: ஆணிபலகையில் அமர்ந்து யோகா செய்து அசத்திய 8 வயது சிறுமி
உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மூலம் ஆணிபலகையில் அமர்ந்து தேசிய கொடியுடன் உடலில் தீபம் ஏந்தி அசத்திய 8 வயது சிறுமி.;
ஆணிப்பலகையின் மீது அமர்ந்து யோகா செய்த மாணவி ஷாஜிதா ஸைனப்.
நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரம் ஊராட்சியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி முகம்மது நஸீருதீன் -ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் மகள் 4 -ம் வகுப்பு மாணவி ஷாஜிதா ஸைனப் (வயது 8) என்பவர் மதநல்லிணக்கம் மற்றும் வேளாண்மை செழிக்க வேண்டி ஆணிபலகையின் மீது யோகாசனத்தில் அமர்ந்து, தேசிய கொடியுடன் உடலில் தீபம் ஏந்தி அசத்தினார்.
இதனை ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வெகுவாக பாராட்டினர். இந்த சிறுமி யோகா மற்றும் ஸ்கேட்டிங்கில் பல சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் மிஸ்பாவின் தங்கை ஆவார். தற்போது இவர்கள் இருவரும் யூனிவர்செல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ஸ்சில் இடம்பிடித்து தற்போது மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர். தனது அக்காவின் சாதனையை முறியடிக்கும் 8 -வயது சிறுமியை இப்பகுதியினர் வெகுவாக பாராட்டினார்கள்.