மனைவியை கொலை செய்த கணவன் - போலீசார் வலைவீச்சு

Update: 2021-04-08 04:00 GMT

ஆலங்குளத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகர் முதல் தெருவில் வசிப்பவர் முருகன் என்பவரது மகன் ராஜகோபால் (28).சவர தொழிலாளி. இவர் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த தனது உறவு பெண்ணான மல்லிகாவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.திருமணத்திற்குப் பின் ராஜகோபால் முத்துகிருஷ்ணபேரியில் உள்ள சலூன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். மல்லிகா தான் வசிக்கும் வீட்டு அருகில் உள்ள பொன்ராஜ் என்பவரது கேபிள் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு முறை மல்லிகா தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை மல்லிகா தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தனியாக இருந்த போது உள்ளே புகுந்த ராஜகோபால் அவரை கத்தியால் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டுச் சென்ற பக்கத்து வீட்டைச் சேர்ந்த சேகர் மனைவி மாரியம்மாள்(45) என்பவரையும் ராஜகோபால் குத்தியுள்ளார். இதில் இரு பெண்களும் பலத்த காயமடைந்தனர். இருவரும் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பலத்த காயமடைந்த மல்லிகா நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.காயமடைந்த மாரியம்மாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜகோபாலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News