தென்காசி அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த நிதி நிறுவன அதிபர்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நிதி நிறுவன அதிபர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Update: 2024-08-27 10:00 GMT

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் இழந்ததால் கடையம் அருகே நிதி நிறுவனர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள மலையானூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் மகன் சக்திவேல் (வயது 31), இவர் கடையம் மெயின் ரோட்டில் பைக் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். சக்திவேல் ஆன்லைன் சூதாட்டமான ரம்மி விளையாடி ரூபாய் 3 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சக்திவேல் கடந்த 21 -ம் தேதி விஷம் அருந்தி மயங்கி விழுந்தார், இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கடையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News