கொரோனா பாதித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Update: 2021-04-20 05:45 GMT

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் சென்னையிலிருந்து வந்தவருக்கு கொரோனா பாதித்ததில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை கன்னியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த மரியாதைராமன் என்பவர் மகன் சுதாகர் (37) இவர் சென்னை கிண்டி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 7 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா (30) என்ற மனைவியும் கேசவ பிரியன் (6) வைஷ்ணவ நம்பி (4) துவாரகீசன் (2) ஆகிய மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் கொரோனா பரிசோதனை முடித்து தனது சொந்த ஊரான இடையர் தவணைக்கு கடந்த ஏப்ரல் 5 ம் தேதி அன்று வந்திருந்த நிலையில் 3 நாட்கள் கழித்து சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக செல்போன் வாயிலாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் சுதாகருக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல், அதிகரித்ததை அடுத்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி ஞாயிறு அன்று சிகிச்சை பெற அட்மிட் ஆகி உள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் 18ம் தேதி முற்பகல் 11 மணி அளவில் சுதாகர் இறந்து விட்டார். இறந்தவரது உடல் தென்காசி, ஆயிரப்பேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறந்து போன நபரின் முதல் நிலை தொடர்பில் இருந்த அவரது உறவினர்கள் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்ட்டு அப்பகுதியில் தீவிர சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News