ஆலங்குளம் அருகே கோஷ்டி மோதலில் 25 பேர் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சாமி கும்பிடுவதில் தகராறு மற்றும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. . இது தொடர்பாக போலீசார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2021-05-06 02:45 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமான சுடலைமாடன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் தரப்பு, சேர்மன் தரப்பு என்று இரண்டு பிரிவாக பிரிந்து வெவ்வேறு மாதங்களில் கோவில்கொடை நடத்தி வழிபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் தரப்பினர் சுடலைமாடன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது அங்கு வந்த சேர்மன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் அருகில் கிடந்த கம்புகளை கொண்டு திடீரென இரு தரப்பினரும் ஒருவரை, ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதனால் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த காமராஜ் மகன் ராஜேந்திரன்(52), ராஜேந்திரன் மகன் கனகராஜ்(32), கஜராஜ் மகன் முருகன்(47), முருகன் மகன் மாரி(22), முருகன் மகன் பத்திரகாளி(30), அருணகிரி மகன் பரமசிவன்(36), அருணாச்சலம் மகன் முருகன்(47) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் கைதானவர்கள் உட்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News