ஆலங்குளம் அருகே தனியார் காற்றாலையில் காப்பர் வயர் திருடிய 7 பேர் கைது

ஆலங்குளம் அருகே தனியார் காற்றாலையில் காப்பர் வயர் திருடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-12-16 09:22 GMT

காற்றாலையில் காப்பர் வயர் திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் காற்றாலையில் ரூ.10.50 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊருக்கு மேல் புறம் தனியாருக்கு சொந்தமான காற்றாலை உள்ளது. அந்த காற்றாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அந்த காற்றாலையை தற்போது வேறொரு நிறுவனம் விலைக்கு வாங்கி பழுதான நிலையில் இருந்த காற்றாலையை பழுது பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காற்றாலையின் உள்பகுதியில் சத்தம் கேட்டுள்ளது.அதை கவனித்த காவலாளி காற்றாலைக்கு  வந்த போது பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காற்றாலையின் தரப்பில் ஆலங்குளம் காவல் நிலையத்திலும் தீயணைப்பு மீட்பு நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து காற்றாலை அலுவலகத்தில் நுழைந்து சோதனை செய்த போது அங்கு விலை உயர்ந்த காப்பர் வயர்கள் சுமார் 600 கிலோ மற்றும் அங்குள்ள கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 10.50 லட்சம் ரூபாய் ஆகும்.

மேலும் அலுவலகம் அருகில் உள்ள காற்றாடியில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்ட காப்பர் வயர்கள் கிடந்தது. திருடியவர்கள் இரண்டாவது முறையாக வந்து இவற்றை ஏற்றி செல்லலாம் என வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் திருடர்கள் விட்டுச் சென்ற காப்பர் வயர்களை ஆலங்குளம் போலீசார் கைப்பற்றினர்.தொடர்ந்து இந்த திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்கள் -குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான கார் மற்றும் டெம்போ மினி லாரியை கண்டு அதை தீவிரமாக கண்காணித்தனர். திருடிய காப்பர் வயரை விற்பனை செய்து விட்டு மீண்டும் திரும்ப வருகையில் போலீசாரிடம் சிக்கினர்.

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய  விசாரணையில் திருவள்ளுர் மாவட்டம் மாதவரத்தை சேர்ந்த தங்கவேலு மகன் சதிஷ்குமார்(32), திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார் திருநகர் சின்னத்துரை மகன் பிரபாகரன் (44), சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த பூபாலன் மகன் விஜயகுமார்(28), ஸ்ரீவில்லிபுதூர் இனாம் கரிசல்குளம் குருவையா மகன் சிவக்குமார் (40), திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ராசு மகன் ரவிச்சந்திரன் (41), செங்குன்றம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் சுரேந்தர் (34), கும்மிடிப்பூண்டி வில்சன் நேசக்குமார் மகன் ஆன்ரன் செல்வகுமார் (37) என தெரியவந்தது. இவர்கள் ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News