பெண் கொலை- சாக்குமூட்டையில் சடலம் வீச்சு

Update: 2021-03-06 08:30 GMT

தென்காசி மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கொய்யாத்தோப்பில் சடலம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த பூலாங்குளம் கிராமத்தில் ஆறுமுகநயினார் (77) என்பவருக்கு சொந்தமாக 5 ஏக்கரில் கொய்யாத்தோப்பு உள்ளது. இவரது தோப்பில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசுவதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது பிளாஸ்டிக் சாக்கில் கட்டப்பட்டு ஒரு பெண் சடலம் கிடப்பது தெரிய வந்தது. மர்ம நபர்கள் பெண்ணை கொலை செய்து முகத்தை சிதைத்து சாக்குமூட்டையில் கட்டி கொய்யாத்தோப்பில் வீசி சென்றது தெரிய வந்தது.

தொடர்ந்து ஆலங்குளம் டிஎஸ்பி., பொன்னிவளவன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு சுமார் 40 வயது இருக்கும் என தெரிய வந்தது. மேலும் அவரது பெயர், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. கொலையுண்ட பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. உடம்பில் ஒரு சில இடங்களில் ரத்த காயம் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட எஸ்பி., சுகுணாசிங் நேரில் விசாரணை நடத்தினார். பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News